சிறந்த பிரசங்கம் என்பது மனித முயற்சியின் விளைவு மட்டுமல்ல; சிறந்த பிரசங்கம் பரிசுத்த ஆவியானவரால் வல்லமையூட்டப்படுவதாகும்.
முன்னுரை
இயேசுவின் பிரசங்கத்திற்கு ஜனங்கள் அளித்த பதிலைக் கேளுங்கள்.
“இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது...ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” (மத்தேயு 7:28-29).
“ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே” (மாற்கு 11:18).
“அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்” (மாற்கு 12:37).
இயேசுவின் பிரசங்கம் வல்லமை வாய்ந்ததாக இருந்தது. அவர் பிரசங்கிப்பதைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் கூடிவந்தார்கள். நிச்சயமாக அவருடைய பிரசங்கப் பாணி இன்று நமக்கு ஒரு மாதிரியாக இருக்க வேண்டும். பூமியில், இயேசு ஒரு மனிதராக ஊழியம் செய்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “இயேசு தேவனாய் இருந்தபடியால் அவர் ஒரு வல்லமையான பிரசங்கியாராக இருந்தார்” என்று நினைக்காதீர்கள். மாறாக, “இயேசு ஒரு மனிதராக, வல்லமையோடும் அதிகாரத்தோடும் பேசும் வகையில் பிரசங்கித்தார். அவருடைய பிரசங்கம் கேட்பவர்களைச் சத்தியத்தை நோக்கி ஈர்த்தது. நற்செய்தியின் சிறந்த பிரசங்கியாராக மாற, நான் இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்?” என்று சிந்தியுங்கள்.
► நீங்கள் கி.பி. 30-ல் வாழ்ந்து, இயேசு பிரசங்கிப்பதைக் கேட்டதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எதைப் பார்க்கவும் கேட்கவும் எதிர்பார்த்திருப்பீர்கள்?
இயேசு அதிகாரத்தோடு பிரசங்கித்தார்
► 2 கொரிந்தியர் 4:1-6-ஐ வாசிக்கவும்.
கப்பர்நகூமில் இயேசு பிரசங்கித்தபோது, ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள், ஏனெனில் அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தது (லூக்கா 4:32). மலைப்பிரசங்கத்திற்குப் பிறகு, “அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” (மத்தேயு 7:28-29). வேதபாரகர்கள் தங்கள் கொள்கைகளை ஆதரிக்க மற்ற ரபிமார்களின் (Rabbis) மேற்கோள்களைக் காட்டினார்கள், ஆனால் இயேசு அதிகாரத்தோடு பிரசங்கித்தார்.
போதகர்களாகிய நாம் அதிகாரத்தோடு பிரசங்கிக்க வேண்டும். நம் அதிகாரம் இயேசுவின் அதிகாரத்திலிருந்து வேறுபட்டது. அவருடைய அதிகாரம் அவரில் இயல்பாகவே இருந்தது; நமது அதிகாரம் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; நாம் பிரசங்கிக்கும் செய்தியிலிருந்து நமது அதிகாரம் பெறப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக நாம் அதிகாரத்தோடு பிரசங்கிக்கிறோம்
இயேசு, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார். அடுத்த வசனத்தில், அவர் தம்மைப் பின்பற்றுவோருக்குக் கட்டளையிட்டார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி... இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்தேயு 28:18-20). இயேசுவின் பிரதிநிதிகளாக நாம் நியமிக்கப்பட்டுள்ளதால் நமக்கு அதிகாரம் உள்ளது.
1783-ல், அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாரிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட அமெரிக்காவின் பிரதிநிதிகளும், மன்னர் மூன்றாம் ஜார்ஜின் பிரதிநிதிகளும் சந்தித்தார்கள். மன்னர் மூன்றாம் ஜார்ஜ் உடன்படிக்கையில் கையெழுத்திட பாரிஸ் செல்லவில்லை. ஜார்ஜ் வாஷிங்டனும் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை. ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளுக்கும் தங்கள் ஆட்சியாளரின் பெயரால் உடன்படிக்கையில் கையெழுத்திட அதிகாரம் இருந்தது.
அதேபோல், நாம் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாகப் பிரசங்கிக்கிறோம். பவுல் எழுதினார்: “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:5). பவுலின் அதிகாரம் அவருடைய சொந்த அதிகாரம் அல்ல. அவர் ஒரு ஊழியக்காரர், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருந்தார்.
நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள செய்தியின் காரணமாக நாம் அதிகாரத்தோடு பிரசங்கிக்கிறோம்
நமது அதிகாரம் நாம் பிரசங்கிக்கும் வேதவசனத்தை அடிப்படையாகக் கொண்டது. பவுல் எழுதினார்: “வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்” (2 கொரிந்தியர் 4:2). பவுல் நேர்மையற்ற எதையும் செய்யவோ அல்லது தேவனுடைய வார்த்தையின் செய்தியைப் பலவீனப்படுத்தும் எதையும் செய்யவோ மறுத்துவிட்டார்.
சில போதகர்கள் வேதாகமத்தை நம்பக்கூடாது என்று கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில் படித்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது அதிகாரத்தோடு பிரசங்கிப்பதில்லை. மாறாக, அவர்கள் சந்தேகத்தால் நிறைந்திருக்கிறார்கள். ஏன்? அவர்கள் வேதாகமத்தின் அதிகாரத்தைச் சந்தேகிக்கிறார்கள்; அவர்கள் மனித ஞானத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். தேவனுடைய ஊழியர்களாக, நமது அதிகாரம் தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தையின் செய்தியை நீங்கள் நம்பாவிட்டால், அதைப் பிரசங்கிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தேவனுடைய வார்த்தையின் செய்தியை நாம் நம்பும்போது மட்டுமே நம்மால் அதிகாரத்தோடு பிரசங்கிக்க முடியும்.
நமது அதிகாரம் இயேசுவிடமிருந்தும் நாம் பிரசங்கிக்கும் செய்தியிலிருந்தும் பெறப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது, போதகர்களுக்கான இரண்டு ஆபத்துகளைத் தவிர்க்க நமக்கு உதவுகிறது.
(1) முதல் ஆபத்து ஆணவம். “நான்தான் போதகர். நான்தான் முதலாளி! யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது” என்று சொல்வது.
இந்த ஆணவம் மக்களை நற்செய்தியிலிருந்து விரட்டுகிறது. பவுல், “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும்... பிரசங்கிக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:5) என்றார். நமது அதிகாரம் இயேசுவிடமிருந்தும் தேவனுடைய வார்த்தையிலிருந்தும் பெறப்படுகிறது.
நாம் தவறு செய்யும்போது அதை ஒப்புக்கொள்ளும் மனத்தாழ்மை நமக்கு இருக்க வேண்டும். ஒரு போதகர் ஒருமுறை கூறினார், “நான் தவறு செய்தால் அதை ஒருபோதும் சபையிடம் சொல்ல மாட்டேன். அவர்கள் என் அதிகாரத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.” இந்த போதகர், நமது அதிகாரம் நமது சொந்தத் தவறாமைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல; அது தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறந்துவிட்டார். தேவனுடைய வார்த்தையே இறுதியான அதிகாரம் என்பதை நாம் நம் சபைக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். என் வார்த்தைகள் முக்கியமானவை அல்ல; தேவனுடைய வார்த்தையே மிக முக்கியமானது.
(2) இரண்டாவது ஆபத்து போலியான மனத்தாழ்மை. “நான் வெறும் ஒரு போதகர். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. உளவியலைப் பற்றித் தொழில்முறை ஆலோசகர்களுக்கு அதிகம் தெரியும்; பூமியின் தோற்றத்தைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு அதிகம் தெரியும்; மனிதனின் பாலியல் ஆசைகளைப் பற்றிச் சமூகவியலாளர்களுக்கு அதிகம் தெரியும். நான் ஒரு நிபுணன் இல்லாததால், என்னால் உணர்வுப்பூர்வமான தேவைகள், சிருஷ்டிப்பு அல்லது ஒழுக்கத்தைப் பற்றிப் பேச முடியாது” என்று சொல்வது.
பவுல், “நாங்கள் ஊழியக்காரர்கள், ஆனால் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக எங்களுக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறினார். ஒரு ஊழியக்காரராக, நாம் மனத்தாழ்மையுடன் வாழ வேண்டும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக, நாம் நம்பிக்கையுடன் பிரசங்கிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை நாம் சரியாகப் பிரசங்கிக்கும்போது, பிரபஞ்சத்தின் ராஜாவின் அதிகாரத்தோடு நாம் ஊழியம் செய்கிறோம்.
இயேசுவின் பிரசங்கங்கள் தேவையிலுள்ள மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்தன
இயேசு தம் பார்வையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பேசினார். இயேசு கலிலேயா எங்கும் சுற்றித்திரிந்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, திரளான கூட்டங்களைப் பார்த்து மனதுருகினார், ஏனெனில் அவர்கள் தொய்ந்துபோனவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தார்கள் (மத்தேயு 9:35-36). யூதர்கள் ரோம அடிமைத்தனத்தில் இருந்தார்கள்; ஏழைகளுக்கு வறுமையிலிருந்து வெளியேறும் நம்பிக்கை குறைவாக இருந்தது; குஷ்டரோகிகள் ஒதுக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள்; ஆயக்காரர்கள் சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசு நம்பிக்கையை அளித்தார்.
மக்களின் தேவைகளைப் பற்றி நீங்கள் பேசும்போது, அவர்களின் கவனத்தை ஈர்க்கிறீர்கள். நான் ஒரு பாலைவனத்தில் வசிக்கிறேன் என்றால், நீங்கள் "இன்று நான் ஜீவத் தண்ணீரைப் பற்றிப் பிரசங்கிக்கப் போகிறேன்" என்று சொன்னால், நான் கவனமாகக் கேட்பேன்! நான் வயதானவனாகவும் பலவீனனாகவும் இருந்து, "கழுகுகளைப் போல உங்களுக்குப் பலன் தரும் தேவனைப் பற்றி இன்று நான் பிரசங்கிக்கப் போகிறேன்" என்று நீங்கள் சொன்னால், நான் நிச்சயம் கேட்பேன்!
சுவிசேஷம் என்றால் “நற்செய்தி” என்பதை இயேசு எப்போதும் நினைவில் வைத்திருந்தார். நம்பிக்கை தேவைப்பட்டவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவர அவர் வந்தார். சிறந்த பிரசங்கம் நம்மைக் கேட்பவர்களுக்கு நம்பிக்கையைக் கொண்டுவர வேண்டும். இயேசுவைப் போல, நாமும் “நான் யாருக்குப் பிரசங்கிக்கிறேன்? அவர்களின் தேவைகள் என்ன?” என்று கேட்டுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு கார் விபத்தில் சிக்கி, இரத்தம் வெளியேறி இறக்கும் அபாயத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். மருத்துவமனையில், மருத்துவர் கார் விபத்துக்கள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கொண்ட ஒரு வண்ண விளக்கப்படத்தை உங்களுக்குக் காட்டுகிறார். அவர் சப்தசோதனைக்குழலின் (Stethoscope) வரலாற்று வளர்ச்சியை குறித்து விளக்குகிறார். இறுதியாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து அவர் உங்களை எச்சரிக்கிறார்.
மருத்துவர் சொல்வது எல்லாம் உண்மைதான், ஆனால் அது உங்கள் தேவையைச் சந்திக்கவில்லை. உங்கள் காயங்களைக் கட்டவும், உங்கள் வலிக்கு மருந்து கொடுக்கவும் உங்களுக்கு யாராவது தேவை. பிரசங்கம் வெறும் சத்தியங்களை முன்வைப்பதை விட அதிகமாகச் செய்ய வேண்டும்; பிரசங்கம் கேட்பவர்களின் தேவைகளைப் பற்றிப் பேச வேண்டும்.
நமது வீழ்ச்சியடைந்த உலகின் கெட்ட செய்திகளைப் பார்ப்பது எளிது. சுவிசேஷம் அதையும் தாண்டிச் செயல்படுகிறது; இது உடைந்த உலகுக்கு நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. இயேசு எப்போதும் தம்மை கேட்பவர்களுக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்தார். இயேசு ஒருபோதும் சத்தியத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை, நாமும் சத்தியத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. ஆனால் சரியாகப் பிரசங்கிக்கப்படும் சத்தியம் நம்பிக்கையைக் கொண்டுவரும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஒரு வயதான போதகர் சொன்னார், “மக்களுக்கு எங்கே அரிப்பு இருக்கிறதோ, அங்கேதான் நீங்கள் சொரிய வேண்டும்.” நீங்கள் யாரைச் சென்றடைய முயற்சிக்கிறீர்களோ அவர்களின் தேவைகளைப் பற்றிப் பேச வேண்டும்.
இயேசுவின் பிரசங்கங்கள் பாவத்தை உணர்த்தின
இயேசு கேட்பவர்களின் தேவைகளிலிருந்து தொடங்கினார், ஆனால் அவரது நோக்கம் அவர்களின் காயங்களுக்குத் தற்காலிகமாகக் கட்டுப் போடுவதை விட ஆழமானது. இயேசுவின் பிரசங்கம் அவர்களின் மனசாட்சியைக் கண்டித்து உணர்த்தி, அவர்களின் வாழ்க்கையை மாற்றியது.
இயேசு தம்மை கேட்பவர்களின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பின் செய்தியைக் கொண்டு அவர்களை எதிர்கொள்ளப் பயப்படவில்லை. விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணிடம் இயேசு, “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை” என்றார், ஆனால் அவர், “நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்றும் சொன்னார் (யோவான் 8:11).
பெதஸ்தா குளத்தருகே இருந்த திமிர்வாதக்காரனைக் குறித்து இயேசுவின் ஊழியத்திலிருந்து ஒரு கதையை யோவான் சொல்லுகிறார். அவரைக் குணமாக்கிய பிறகு, இயேசு, “இதோ, நீ சொஸ்தமானாய், அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே” என்றார் (யோவான் 5:14). பாவத்தை எதிர்கொள்ள இயேசு பயப்படவில்லை.
இயேசு பிரசங்கித்தபோது, அவரைக் கேட்டவர்கள் பாவ உணர்வடைந்தார்கள். பல சமகாலப் போதகர்களைப் போலல்லாமல், இயேசு நீதிமான வாழ்க்கை வாழ்வதன் அவசியத்தைப் பிரசங்கித்தார். “என் பிதா நீங்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று இயேசு எங்கும் சொல்லவில்லை. மாறாக, இயேசு சொன்னார்: “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 5:20). இயேசுவின் பிரசங்கம் அவரைக் கேட்ட அனைவருக்கும் பாவ உணர்வைக் கொண்டுவந்தது.
இயேசுவின் பிரசங்கங்கள் வாழ்க்கையை மாற்றின
[1]அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், டாக்டர் ஃபினியாஸ் கர்லி போதகராக இருந்த ஒரு சபைக்குச் சென்றார். ஆராதனை முடிந்ததும், ஒரு நண்பர், “அந்தப் பிரசங்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். லிங்கன், “அது நன்றாக வழங்கப்பட்டது மற்றும் அழகான சிந்தனைகளைத் தந்தது” என்றார்.
அந்த நண்பர், “அப்படியானால் அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?” என்று கேட்டார். திரு. லிங்கன் தயக்கத்தோடு, “இல்லை”. இன்றிரவு கனம்பொருந்திய கர்லி தோல்வியடைந்துவிட்டார் என்று நான் நம்புகிறேன்” என்றார். அந்த நண்பர் ஆச்சரியத்தோடு, “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு லிங்கன், “அவர் பெரிய காரியம் எதையும் செய்யும்படி நம்மைக்கேட்கவில்லை” என்று பதிலளித்தார். ஒரு பிரசங்கம் ஒரு செயல்பாட்டிற்கு (அல்லது பதிலுக்கு) அழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி லிங்கன் நம்பினார். ஒரு பிரசங்கம் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று அவர் நம்பினார்.
► மத்தேயு 18-ஐ வாசிக்கவும்.
வாழ்க்கையை மாற்றுவதற்காகவே இயேசு பிரசங்கித்தார். அவருடைய பிரசங்கம் நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது. மத்தேயு 18-ம் அதிகாரம் “பரலோக ராஜ்யத்தில் உறவுகள்” என்பது குறித்த இயேசுவின் பிரசங்கத்தைப் பதிவுசெய்கிறது. இயேசு இவற்றைக் குறித்துப் போதிக்கிறார்:
உங்களுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறவர்களிடம் நடந்துகொள்ளும் முறை (18:15-20)
மன்னிப்பின் அவசியம் (18:21-35)
இவையெல்லாம் அன்றாட வாழ்வின் நடைமுறைப் பிரச்சினைகள். இயேசு தம்மை கேட்பவர்களின் உண்மையான தேவைகளைப் பற்றிப் பேசினார். அவர் வாழ்க்கையை மாற்றும் விதமாகப் பிரசங்கித்தார்.
பிறவிக்குருடரான ஒரு மனிதனுக்கு, இயேசு சுகம் அளித்தார், பின்னர் அந்த மனிதனின் வாழ்க்கையை நித்தியத்திற்கும் மாற்றக்கூடிய செய்தியைக் கொடுத்தார்.
அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான் (யோவான் 9:35-38).
பசியாய் இருந்த மக்களுக்கு, இயேசு அப்பம் கொடுத்தார், பின்னர் அவர்களின் வாழ்க்கையை நித்தியத்திற்கும் மாற்றக்கூடிய சத்தியத்தைப் பிரசங்கித்தார். “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35).
வாழ்க்கையை மாற்றும் பிரசங்கம், தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தையும் மக்களின் தேவைகளையும் ஒன்றிணைக்கிறது. பயனுள்ள பிரசங்கம் என்பது மக்களின் தேவைகளுக்குத் தேவனுடைய சத்தியத்தைப் பேசுவதாகும்.
இயேசு பிரசங்கித்தபோது, அவர் சிந்தை, உணர்ச்சிகள், மற்றும் சித்தம் ஆகியவற்றுக்குப் பேசினார். உண்மையான மாற்றத்தில் இந்த மூன்றும் அடங்கும்.
இயேசு சிந்தையினிடத்தில் பேசினார்
மத்தேயு 18-ல் உள்ள இயேசுவின் பிரசங்கத்தை நீங்கள் வாசிக்கும்போது, உறவுகளைப் பற்றி இதுவரை கொடுக்கப்பட்டதிலேயே மிக ஞானமான போதனையை வாசிக்கிறீர்கள். மக்கள் ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் பழகும் ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். மன்னிப்பு இயல்பாக இருக்கும் ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இயேசு தம்மை கேட்பவர்களின் சிந்தைக்கு ஞானத்தைப் பேசினார்.
இயேசு உணர்ச்சிகளிடத்தில் பேசினார்
சுவிசேஷங்கள் 34 முறை இயேசுவைக் கேட்டவர்களிடம் காணப்பட்ட ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் பற்றிக் குறிப்பிடுகின்றன. எம்மாவு ஊருக்குச் செல்லும் வழியில் சீஷர்கள், “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” (லூக்கா 24:32) என்று சொன்னார்கள். இயேசுவைக் கேட்டவர்கள் அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளில் மகிழ்ச்சியையும், தங்கள் பாவங்களுக்காகத் துக்கத்தையும், எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உணர்ந்தார்கள்.
இயேசு சித்தத்தினிடத்தில் பேசினார்
வெறுமனே கேட்பவர்கள் மட்டும் இருந்தால் போதும் என்று இயேசு திருப்தியடையவில்லை; அவர் சீஷர்களை (பின்பற்றுபவர்களை) அழைத்தார். வெளிப்புற மாற்றம் மட்டும் போதும் என்று இயேசு திருப்தியடையவில்லை; அவர் மாற்றப்பட்ட இதயங்களையும் வாழ்க்கையையும் அழைத்தார். பாவம் நிறைந்த கடந்த காலத்தைக் கொண்ட சமாரியப் பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லது நியாயப்பிரமாணத்தைக் கவனமாகக் கடைப்பிடித்த ஐசுவரியமுள்ள வாலிபனாக இருந்தாலும் சரி, இயேசு தம்மை கேட்பவர்களைத் தங்கள் சித்தத்தை (விருப்பத்தை) தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்படி அழைத்தார். நாம் இயேசுவைப் போலப் பிரசங்கிக்கும்போது, நம்மைக் கேட்பவர்களைப் புதிய வாழ்க்கை முறைக்கு அழைப்போம்.
“வேதாகமம் நம் அறிவைப் பெருக்குவதற்காக மட்டுமல்ல, நம் வாழ்க்கையை மாற்றுவதற்காகவும் கொடுக்கப்பட்டது.”
- D.L. மூடியைத் தழுவியது.
ஒரு நெருக்கமான பார்வை: நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறீர்களா?
ஒரு போதகர் ரோமர் முதலாம் அதிகாரத்திலிருந்து ஓரினச்சேர்க்கை என்னும் பாவத்திற்கு எதிராகப் பிரசங்கித்தார். அவர் சத்தியத்தைப் பிரசங்கித்தார். ஆனால் ஏதோ ஒன்று குறைவுபட்டது... சபையில் அமர்ந்திருந்த ஒரு வாலிபன் தன்பாலின ஈர்ப்பினால் போராடிக்கொண்டிருக்கிறான். ஓரினச்சேர்க்கை பாவம் என்று அவனுக்குத் தெரியும், அவன் அதிலிருந்து விடுதலையை வேண்டி ஜெபிக்கத் தொடங்கியிருக்கிறான். தன் பாவத்தைப் பற்றிய சத்தியத்தை அவன் அறிவான்; ஆனால் சோதனைக்கு மேல் தேவன் ஜெயத்தைக் கொடுக்க முடியும் என்ற நற்செய்தியை (சுவிசேஷத்தை) அவன் கேட்க வேண்டும்.
ஒரு போதகர் விவாகரத்து குறித்து இயேசுவின் எச்சரிக்கையை மேற்கோள் காட்டினார். எளிதாக விவாகரத்து செய்ய அனுமதிக்கும் சட்டங்களைக் குறித்து அவர் வருந்தினார். அவர் சத்தியத்தைப் பிரசங்கித்தார். ஆனால் ஏதோ ஒன்று குறைவுபட்டது... அந்த வாரம், இரண்டு சிறு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளம் தம்பதியினர், தங்கள் திருமண வாழ்வைப் பிரித்துக்கொண்டிருக்கும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியாமல் விவாகரத்து வழக்கறிஞரைச் சந்தித்திருந்தனர். விவாகரத்து பாவம் என்று அவர்களுக்குத் தெரியும்; காயப்பட்ட திருமண வாழ்வுக்கு இயேசு சுகத்தைக் கொண்டுவர முடியும் என்ற நற்செய்தியை (சுவிசேஷத்தை) அவர்கள் கேட்க வேண்டும்.
“கருக்கலைப்பு என்பது ஒரு குற்றமற்ற குழந்தையைக் கொலை செய்வது” என்று ஒரு போதகர் சத்தமிட்டார். அவர் சத்தியத்தைப் பிரசங்கித்தார். ஆனால் ஏதோ ஒன்று குறைவுபட்டது... திருமணமாகாத இளம் பெண்ணாகத் தான் ஒரு கருக்கலைப்பு மையத்திற்குச் சென்ற நாளை நினைத்து அழும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவருடைய சபையில் இருந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், தேவன் தன் பாவத்தை மன்னிப்பாரா என்று அவள் இன்னும் சந்தேகிக்கிறாள். கருக்கலைப்பு பாவம் என்று அவளுக்குத் தெரியும்; தேவன் அவளுடைய கடந்த காலத்திற்கு மன்னிப்பை அளிக்கிறார் என்ற நற்செய்தியை (சுவிசேஷத்தை) அவள் கேட்க வேண்டும்.
இயேசு ஒருபோதும் சத்தியத்தில் சமரசம் செய்துகொள்ளவில்லை, ஆனால் நம்பிக்கையைக் கொண்டுவர அவர் ஒருபோதும் மறக்கவில்லை. சுவிசேஷம் வாழ்க்கையை மாற்றும் என்பதை அவர் அறிந்திருந்தார். தன்பாலின ஈர்ப்பால் போராடும் வாலிபனிடம், “சோதனையை வெல்ல என் கிருபை உனக்குப் போதும்” என்று இயேசு சொல்வார். உடைந்த திருமணத்தை எதிர்கொள்ளும் தம்பதியரிடம், “அன்பே இல்லாதது போல் தோன்றும் அந்தத் துணைவியின் மீதும் அன்பு கொண்ட இதயத்தை என்னால் மீண்டும் உருவாக்க முடியும்” என்று இயேசு சொல்வார். தன் கருவிலிருந்த குழந்தைக்கு விரோதமாய்ப் பாவம் செய்த பெண்ணிடம், “மற்ற பாவங்களை நான் மன்னிப்பதைப் போலவே கருக்கலைப்புப் பாவத்தையும் நான் மன்னிப்பேன். நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்று இயேசு சொல்வார்.
சுவிசேஷம் பாவத்தின் மீதான நியாயத்தீர்ப்பின் செய்தியை உள்ளடக்கியது. நாம் அதிகாரத்தோடு நியாயத்தீர்ப்பைப் பிரசங்கிக்க வேண்டும். ஆனால் இயேசுவைப் போலப் பிரசங்கிக்க, வாழ்க்கையை மாற்றும் கிருபையின் வல்லமையை நாம் மறந்துவிடக் கூடாது. உடைந்த உலகுக்குத் தேவனுடைய கிருபையின் நற்செய்தியை நாம் கொண்டுவர வேண்டும்.
சுவிசேஷம் எப்போதும் இரண்டு நற்செய்திகளை உள்ளடக்கியது. முதலாவதாக, தேவன் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதைச் சுவிசேஷம் நமக்குச் சொல்கிறது. அது நம்பிக்கையற்ற உலகுக்கு நம்பிக்கையைக் கொண்டுவருகிறது.
பின்னர், பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் நாம் என்னவாக மாற முடியும் என்பதைச் சுவிசேஷம் நமக்குச் சொல்கிறது. சுவிசேஷம் நம்மை நாம் இருந்த இடத்திலேயே விட்டுவிடுவதில்லை; அது தேவனுடனான ஆழமான நடத்தைக்கு நம்மை அழைக்கிறது.
இயேசுவின் பிரசங்கங்கள் எளிமையாகவும் நினைவில் நிற்கக்கூடியதாகவும் இருந்தன
இயேசு சத்தியத்தைக் கொண்டு மக்களை ஒருபோதும் சலிப்படையச் செய்யவில்லை. எளிமையாகவும் நேரடியாகவும் எப்படிப் பிரசங்கிப்பது என்று அவர் அறிந்திருந்தார். அவர் ஆழமான சத்தியங்களைத் தொடர்புகொண்டார், ஆனால் பார்வையாளர்களில் படிப்பறிவற்ற நபரின் ஆர்வத்தையும் அவர் தக்கவைத்துக்கொண்டார்.
ஒரு சிறந்த பிரசங்கியாரின் நோக்கம் தனது ஆழமான அறிவால் பார்வையாளர்களைக் கவர்வதல்ல. தேவனுடைய வார்த்தையை எளிமையாகவும் வல்லமையாகவும் தொடர்புகொள்வதும், தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தைக் கொண்டு கேட்பவர்களை உணர்த்தப் பரிசுத்த ஆவியானவரை அனுமதிப்பதுமே பிரசங்கியாரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இயேசு தனது பிரசங்கங்களை எவ்வாறு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றினார்?
இயேசு கதைகளைச் சொன்னார்
இயேசுவின் பிரசங்கங்களைக் கேட்டவர்கள் அடிக்கடி, “நான் உங்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறேன்” என்ற வார்த்தைகளைக் கேட்டார்கள். அவருடைய கதைகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன மற்றும் அவருடைய செய்திக்கு அவர்களின் காதுகளைத் திறந்தன.
நம்மில் பெரும்பாலோர் மூன்று குறிப்புகள் கொண்ட பிரசங்கக் குறிப்பை விட, ஒரு கதையை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கிறோம். நல்ல கதைகள், பிரசங்கத்தின் முக்கியக் கருத்தை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் வகையில் பிரசங்கத்தை விளக்குகின்றன. பிரசங்கியார் தொடர்புகொள்ள முயற்சிக்கும் செய்தியை ஒரு சிறந்த கதை சுருக்கமாகக் கூறுகிறது.
► நீங்கள் கடைசியாக ஒரு பிரசங்கத்தில் கேட்ட கதையைப் பற்றி விவாதிக்கவும். அது பிரசங்கியாரின் செய்தியைத் திறம்படத் தொடர்புகொண்டதா? அந்தக் கதையின் நோக்கத்தை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அந்தக் கதை இல்லாவிட்டால் அந்தப் பிரசங்கம் அவ்வளவு பயனுள்ளதாகவும் மறக்க முடியாததாகவும் இருந்திருக்குமா?
இயேசு எளிய மொழியைப் பயன்படுத்தினார்
ஒரு ஆசிரியர் ஒரு கருத்தை எவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறாரோ, அவ்வளவு எளிமையாக அதை ஒரு மாணவருக்கு விளக்க முடியும். கருத்தைக் கற்பிக்கச் சிக்கலான வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஒரு ஆசிரியர், பெரும்பாலும் தனது புரிதலின்மையையே மறைக்கிறார். நீங்கள் எதையாவது எவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு எளிமையாக அதை உங்களால் தொடர்புகொள்ள முடியும்.
சத்தியத்தைத் தம் பார்வையாளர்களின் மொழியில் எப்படி மொழிபெயர்ப்பது என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் விவசாயிகளிடம் விதை விதைப்பதைப் பற்றிப் பிரசங்கித்தார். அவர் மேய்ப்பர்களிடம் ஆடுகளைப் பற்றிப் பிரசங்கித்தார். அவர் மீனவர்களிடம் மீன்பிடிப்பதைப் பற்றிப் பிரசங்கித்தார். பலர் இயேசுவின் செய்தியை நிராகரித்தனர், ஆனால் யாரும் அவருடைய பிரசங்கங்களால் சலிப்படையவில்லை.
இயேசுவின் செய்தியை மீனவர்கள், விவசாயிகள் மற்றும் குடும்பத் தலைவிகள் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது அறிஞர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் அதிகாரிகளின் பிரச்சினைகளையும் பேசியது. அவரது பிரசங்கம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பேசியது. எளிமை என்றால் ஆழமற்றது (shallow) என்று அர்த்தமல்ல. நமது பிரசங்கங்கள் சுவிசேஷத்தின் மகத்தான உண்மைகளைத் தெளிவோடும் எளிமையோடும் தொடர்புகொள்ள வேண்டும்.
இயேசு திரும்ப திரும்பக் கூறும் முறையைப் பயன்படுத்தினார்
ஒரு இளம் போதகர் தனது சபையைப் பார்த்து விரக்தியடைந்தார். அவர், “இதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும்; நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றிப் பிரசங்கித்தேன்” என்றார். அவரது நண்பர், சீஷர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பு இயேசு ஒரே செய்தியைப் பலமுறை பிரசங்கித்தார் என்பதை அவருக்கு நினைவுபடுத்தினார்.
அந்த நண்பர் அந்தப் போதகரிடம், “உங்கள் பிரசங்கம் இயேசுவை விடச் சிறந்தது என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“நிச்சயமாக இல்லை!”
“உங்கள் சபை உறுப்பினர்கள் சீஷர்களை விட ஞானமுள்ளவர்கள் என்று நினைக்கிறீர்களா?”
“இல்லை!”
“அப்படியானால், இயேசு செய்ததைப் போலவே நீங்களும் சத்தியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்.”
இயேசு ஒரே சத்தியங்களைத் திரும்பத் திரும்பப் பிரசங்கித்தார். அவர் தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி மீண்டும் மீண்டும் சீஷர்களுக்குக் கற்பித்தார். அவர் ராஜ்யத்தின் செய்தியைப் பலமுறை பிரசங்கித்தார். இந்தச் சத்தியங்கள் மிக முக்கியமானவை என்பதை இயேசு அறிந்திருந்தார், எனவே தனது பார்வையாளர்களைச் சென்றடைய எத்தனை முறை தேவையோ அத்தனை முறை அந்தச் செய்தியைப் பிரசங்கித்தார்.
இயேசுவின் பிரசங்கங்கள் உண்மையானவையாக இருந்தன
இயேசுவின் பிரசங்கம் உண்மையானதாக இருந்தது. அவருடைய வாழ்க்கை அவருடைய செய்திக்குப் பொருத்தமாக இருந்தது. இயேசு தேவபக்திக்குரிய வாழ்க்கையைப் பற்றி வெறுமனே பிரசங்கிக்கவில்லை; அவர் தேவபக்திக்குரிய வாழ்க்கையை வாழ்ந்தார். இயேசுவின் செய்திக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இடையில் ஒரு முரண்பாடு உள்ளது என்று யாராலும் சுட்டிக்காட்ட முடியவில்லை. இயேசு எதைப் பிரசங்கித்தாரோ, அதையே வாழ்ந்தார்.
நீங்கள் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் இரண்டு ஆசிரியர்களை நீங்கள் காண்கிறீர்கள். ஒரு ஆசிரியர் இதுவரை காரை ஓட்டியதே இல்லை, ஆனால் கார் ஓட்டுவது பற்றிப் பல புத்தகங்களைப் படித்திருக்கிறார். மற்றவரோ பல ஆண்டுகளாகப் பாதுகாப்பாக வண்டி ஓட்டுபவர் என்று பெயர் பெற்றவர். எந்த ஆசிரியரை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?
[1]இப்போது நீங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இரண்டு போதகர்களைக் காண்கிறீர்கள். ஒரு போதகர் பாவ வாழ்க்கை வாழ்கிறார், ஆனால் அவர் நல்ல பிரசங்கங்களைச் செய்கிறார். மற்றொரு போதகர், தேவனுடனான தனது நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் விதத்தில் வாழ்கிறார். எந்தப் போதகரை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?
நமது பிரசங்கம் உண்மையானதாக இருக்க வேண்டும். நாம் பிரசங்கிக்கும் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். பல பிரசங்கியார்கள், சிறிது காலத்திற்கு நேர்மையைப் போல நடிப்பது சாத்தியம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். நேர்மையைப் பற்றிப் பிரசங்கித்துக்கொண்டே காணிக்கைப் பணத்தைத் திருடும் ஒரு பிரசங்கியாரால் மக்கள் ஏமாற்றப்படலாம். ஒழுக்கத்தைப் பற்றிப் பிரசங்கித்துக்கொண்டே விபச்சாரம் செய்யும் ஒரு பிரசங்கியாரால் அவர்கள் தவறாக வழிநடத்தப்படலாம். அன்பைப் பற்றிப் பிரசங்கித்துக்கொண்டே தன் மனைவியை அடிக்கும் ஒரு போதகரால் அவர்கள் ஏமாற்றப்படலாம். ஆனால் இறுதியில், உண்மை வெளியே வரும். வெறுமையான இதயம், ஆவிக்குரிய வல்லமையற்ற ஒரு ஊழியத்தையே விளைவிக்கும். தேவன் நமக்குள் கிரியை செய்ய நாம் அனுமதிக்கும்போது, அவர் நம் மூலமாக கிரியை செய்கிறார்.
பிரசங்க ஊழியத்தின் கவர்ச்சி, ஒரு பாவமுள்ள வாழ்க்கையை மறைக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். சிறந்த பிரசங்கம் தேவனை அறிந்த இதயத்திலிருந்தே தொடங்குகிறது.
“இயேசு, ‘அவர்களுடைய ஊழியத்தின் அளவைக் கொண்டு அவர்களை அறிவீர்கள்’ என்று ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், ‘அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்’—அதாவது பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிவதினாலே அறிவீர்கள் என்று அவர் சொன்னார்.”
- கிரேக் கீனர்
பயன்பாடு: மேய்ப்பராகிய போதகர்
► மாற்கு 6:30-34-ஐ வாசிக்கவும்.
ஒரு போதகருக்கான சிறந்த உருவகங்களில் ஒன்று மேய்ப்பன். “இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.” இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, ஒரு மேய்ப்பன் தேவைப்படுகின்ற ஆடுகளாகக் கண்டார்.
► மாற்கு 6-ல் இருந்த 5,000 பேர் கொண்ட அந்த கும்பலில் யார் யார் இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள்.
மக்களை ஏமாற்றிய ஆயக்காரர்கள் உங்கள் பட்டியலில் இருக்கிறார்களா? அவர்கள் அங்கே இருந்தார்கள். நேர்மையற்ற இந்த ஆயக்காரர்களைப் பார்த்துக் கண்டனம் தெரிவித்துச் சத்தமிடுவது எளிது, ஆனால் மீட்கப்பட வேண்டிய காணாமல்போன ஆடுகளை இயேசு கண்டார்.
இயேசுவைப் பொறியில் சிக்கவைக்கக் காத்திருந்த, நியாயந்தீர்க்கிற பரிசேயர்கள் உங்கள் பட்டியலில் இருக்கிறார்களா? அவர்கள் அங்கே இருந்தார்கள். கூட்டத்திற்கு முன்னால் அவர்களை அவமானப்படுத்துவது இயேசுவுக்கு எளிதாக இருந்திருக்கும், ஆனால் சரியான பாதை தேவைப்படும் பிடிவாதமுள்ள ஆடுகளை இயேசு கண்டார்.
விபச்சாரம் செய்ததால் தன் மனசாட்சியால் குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்ட உண்மையில்லாத கணவன் உங்கள் பட்டியலில் இருக்கிறானா? அவன் அங்கே இருந்தான். சீர்திருத்தமும் பின்னர் சுகமும் தேவைப்படும் ஒரு விழுந்துபோன ஆட்டை இயேசு கண்டார்.
வீட்டிற்கு எதிராகக் கலகம் செய்து, பள்ளியிலிருந்து ஓடிப்போய், அடையாளம் தெரியாத அந்தக் கூட்டத்தில் இணைந்த டீனேஜர்கள் உங்கள் பட்டியலில் இருக்கிறார்களா? அவர்கள் அங்கே இருந்தார்கள். தாங்கள் இன்னும் தூரம் வழிவிலகிச் செல்வதற்கு முன்பாக, சரியான பாதைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டிய, அலைந்து திரியும் ஆடுகளை இயேசு கண்டார்.
நீங்கள் பிரசங்கிக்கும்போது யாரைப் பார்க்கிறீர்கள்? உங்கள் சபையின் குறைகளை மட்டுமே பார்க்கிறீர்களா அல்லது உங்கள் ஆடுகளின் ஆழமான தேவைகளைப் பார்க்கிறீர்களா? கோபமுள்ள ஒரு சபை நிர்வாகக் குழு உறுப்பினரை மட்டுமே பார்க்கிறீர்களா அல்லது மற்றவர்களைக் காயப்படுத்தும், காயப்பட்ட ஓர் ஆட்டைப் பார்க்கிறீர்களா? பின்மாற்றம் அடைந்த ஒருவரைமட்டுமே பார்க்கிறீர்களா அல்லது பாவத்தினால் அவதிப்படும் ஓர் ஆட்டைப் பார்க்கிறீர்களா? இயேசு தேவையிலுள்ள ஆடுகளைக் கண்டார்.
► யோவான் 10:1-18-ஐ வாசிக்கவும்.
போதகர்களாகிய நாம் மேய்ப்பர்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு மேய்ப்பன் ஆடுகளுக்கு எப்படிச் சேவை செய்கிறான்? யோவான் 10 ஒரு மாதிரியை வழங்குகிறது.
ஒரு மேய்ப்பன் ஆடுகளை வழிநடத்துகிறான்
நீங்கள் ஒரு மேய்ப்பனைப் பார்த்தால், அவன் ஆடுகளைத் தடியால் அடித்து ஓட்டிக்கொண்டு போவதை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். மாறாக, ஒரு மேய்ப்பன் ஆடுகளைச் சரியான திசையில் வழிநடத்திச் செல்கிறான். “ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:3-4) என்று இயேசு சொன்னார்.
நாம் சுவிசேஷங்களை வாசிக்கும்போது, பல நேரங்களில் இயேசு பேதுருவையோ, யோவானையோ அல்லது தோமாவையோ தடியால் அடிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்! மீண்டும் மீண்டும், அவர்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களை அடிப்பதற்குப் பதிலாக, பலவீனமான, போராடுகிற இந்தச் சீஷர்களைத் தூக்கிவிடுவதற்கும், அவர்களைச் சரியான பாதையில் நிறுத்துவதற்கும் இயேசு ஒரு மேய்ப்பனின் கோலைப் பயன்படுத்துகிறார்.
ஒரு மேய்ப்பராக, தேவன் உங்கள் சபையில் வைத்திருக்கும் ஆடுகளை நீங்கள் வழிநடத்துகிறீர்களா அல்லது ஓட்டுகிறீர்களா? நீங்கள் ஆடுகளை வழிநடத்தும் மேய்ப்பரா அல்லது ஆடுகள் கீழ்ப்படிய வேண்டும் என்று கட்டளையிடும் ஒரு நிர்வாகியா?
ஒரு மேய்ப்பன் ஆடுகளைப் பராமரிக்கிறான்
“காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேலை, வார இறுதி நாட்கள் விடுமுறை, மாலை 5:00 மணிக்குப் பிறகு தொலைபேசி அழைப்புகள் எதுவும் இல்லை என்ற ஒரு வேலை எனக்கு வேண்டும்” என்று நீங்கள் சில சமயங்களில் நினைக்கிறீர்களா? அது சில நேரங்களில் கேட்பதற்கு அற்புதமாகத் தோன்றலாம்! ஆனால் அது ஒரு மேய்ப்பனின் வாழ்க்கை அல்ல.
மேய்ப்பன் அலுவலக நேரங்களில் மட்டுமல்ல, ஆடுகளுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் அவற்றைப்பராமரிக்கிறான். காயப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியிடம், “நாளை காலை 9:00 மணிக்கு நான் பணிக்கு வரும் வரை அங்கேயே இரு” என்று ஒரு மேய்ப்பனால் சொல்ல முடியாது. அந்த ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக மேய்ப்பன் இரவிலும் வெளியே செல்கிறான்.
அதேபோல், போதகரும் தன் ஆடுகளுக்கு உதவி தேவைப்படும்போது அவற்றைப் பராமரிக்கிறார். ஆவிக்குரிய ஆடுகளைப் பராமரிப்பது என்பது பிரசங்கம் பண்ணுவதை விட மேலானது. அது பிரசங்கத்தை உள்ளடக்கியதுதான், ஆனால் அது ஆலோசனை கூறுவது, சந்திப்பது, செவிகொடுப்பது, ஜெபிப்பது, மற்றும் சில சமயங்களில் காயப்பட்ட ஆட்டுக்குட்டியுடன் சும்மா அமர்ந்திருப்பது ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
ஆம் போதகர்களே, உங்களை நீங்களே பராமரித்துக்கொள்ள வேண்டும். சரீர ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் உங்களை நீங்களே வருத்திக்கொண்டால், உங்களால் ஒரு சிறந்த மேய்ப்பராக இருக்க முடியாது. இயேசு தனித்திருக்க நேரம் ஒதுக்கினார், நீங்களும் தனித்திருக்க நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால் வேறு சில நேரங்களில், ஆடுகளைப் பராமரிக்கத் தன் சௌகரியத்தைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார்.
ஊழியம் மற்றும் ஓய்வு ஆகியவற்றுக்கு இடையிலான இந்தச் சமநிலை கடினமாக இருக்கலாம். ஞானமுள்ள ஒரு மேய்ப்பராகிய போதகர், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஞானமான ஆலோசனைக்கும் உணர்வுள்ளவராக இருக்க வேண்டும். “ஓய்வுக்கும் புதுப்பித்தலுக்கும் ஒதுங்கியிருக்க இதுவே நேரம்” என்று ஆவியானவர் சொல்லும்போது, அந்தச் சத்தத்திற்குச் செவிசாயுங்கள். “உங்களுக்குச் சிறிது ஓய்வு தேவை” என்று சொல்லும் உங்கள் மனைவி அல்லது உடன் ஊழியரின் குரலுக்குச் செவிசாயுங்கள். தேவன் உங்களிடம் ஒப்படைத்த ஆடுகளைப் பராமரிப்பதற்கு, புதுப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு புதிய வாஞ்சையோடு திரும்பி வாருங்கள்.
ஒரு மேய்ப்பன் ஆடுகளைப் பாதுகாக்கிறான்
ஆபத்தைக் கண்டதும் ஓடிப்போகும் கூலி ஆளுக்கும், தன் உயிருக்கு ஆபத்து வந்தாலும் ஆடுகளைப் பாதுகாக்கும் நல்ல மேய்ப்பனுக்கும் உள்ள வித்தியாசத்தை இயேசு எடுத்துக்காட்டினார். கூலி ஆளுக்கு ஆடுகளைக் குறித்துக் கவலையில்லை, ஆனால் மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா 10:13, 15).
இயேசு தனது கடைசி நேரத்தில்கூட, சீஷர்களைப் பராமரித்தார். இராபோஜனத்தின்போது, அவர்கள் விரைவில் சந்திக்கவிருந்த சோதனைக்கு அவர்களைத் தயார்படுத்தினார். கெத்செமனே தோட்டத்திலே, அவர் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருக்குத் தொடர்ந்து போதித்தார். சிலுவையில், அவர் மரியாளையை யோவானின் பராமரிப்பில் ஒப்படைத்தார். முடிவுபரியந்தம், அந்த நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளைப் பராமரித்துக்கொண்டிருந்தார்.
எபேசு சபையின் மூப்பர்களை மேய்ப்பர்களாக ஊழியம் செய்யும்படி பவுல் பொறுப்புவித்தார். இயேசுவின் சொந்த இரத்தத்தால் சம்பாதிக்கப்பட்ட மந்தையை அவர்கள் பராமரிக்க வேண்டியிருந்தது. அடுத்த வசனத்தில், மந்தையைத் தாக்கும் கொடிய ஓநாய்களைக் குறித்துப் பவுல் எச்சரித்தார். மந்தையைப் பாதுகாப்பது மேய்ப்பர்களின் பொறுப்பாக இருந்தது (அப்போஸ்தலர் 20:28-31).
ஒரு மேய்ப்பராகிய போதகரே, தேவன் உங்கள் சபையில் வைத்துள்ள ஆடுகளை நீங்கள் பாதுகாக்கிறீர்களா? உபதேசத் தவறுகளிலிருந்தும், அவர்களின் திருமணம் மற்றும் குடும்பத்தின் மீதான தாக்குதல்களிலிருந்தும், பிற ஆவிக்குரிய தாக்குதல்களிலிருந்தும் நீங்கள் அவர்களைப் பாதுகாக்கிறீர்களா? நீங்கள் மேய்ப்பரா அல்லது கூலி ஆளா?
அடுத்த ஞாயிற்றுக்கிழமை நீங்கள் பிரசங்கிப்பதற்கு முன், உங்கள் ஆடுகளின் தேவைகளை உங்களுக்குக் காண்பிக்கும்படி தேவனிடம் கேளுங்கள். உங்கள் மந்தையில் உள்ள உடைந்த இதயங்களை உங்களுக்குக் காண்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள். நீங்கள் பிரசங்கிக்கும்போது, தொய்ந்துபோனவர்களும் உதவியற்றவர்களுமாய் இருக்கிற, தேவபக்திக்குரிய ஒரு மேய்ப்பனின் அன்பு தேவைப்படுகிற ஆடுகளைப் பாருங்கள்.
ஒரு நெருக்கமான பார்வை: “ஐயோ!”
► மத்தேயு 23:1-39-ஐ வாசிக்கவும்.
தம்மை நிராகரித்த நகரங்களிடமும் (மத்தேயு 11:21), மக்களைத் தவறாக வழிநடத்திய பரிசேயர் மற்றும் வேதபாரகரிடமும் (மத்தேயு 23:13-29), தம்மை காட்டிக்கொடுக்கப்போகிற யூதாஸைப் பற்றியும் (மாற்கு 14:21) பேசும்போது இயேசு “உனக்கு ஐயோ” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். தம்மை நிராகரித்தவர்களிடமும் இயேசு அன்பு காட்டினார் என்பதை மறந்துவிட்டு, சில நேரங்களில் நாம் இந்த “ஐயோ” என்ற வார்த்தைகளைக் கோபமான தொனியில் வாசிக்கிறோம்.
“ஐயோ” என்ற வார்த்தையில் நியாயத்தீர்ப்பு இருக்கிறது, ஆனால் அதில் துக்கமும் இருக்கிறது. “ஐயோ” என்பது நியாயத்தீர்ப்பையும், அதே நேரத்தில் நியாயந்தீர்க்கப்படுபவர் மீதான “துக்கம் மற்றும் பரிதாபத்தையும்” உள்ளடக்கியது. “தங்கள் நிலையின் உண்மையான துயரத்தை உணராதவர்களுக்காக இயேசு கொள்ளும் வருத்தத்தை” இது வெளிப்படுத்துகிறது.[1] “ஐயோ” என்பது எச்சரிக்கையை மட்டுமல்ல, ஆழ்ந்த துக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
மதத் தலைவர்கள் மீதான நியாயத்தீர்ப்பை அறிவித்து முடித்த பிறகு, இயேசு தான் நேசித்த நகரத்தின் முடிவை நினைத்து அழுதார். “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.” விரைவில் தன்னைச் சிலுவையில் அறையப்போகும் அந்த நகரத்தின் முடிவை நினைத்து இயேசு அழுதார் (மத்தேயு 23:37 மற்றும் லூக்கா 19:41).
நியாயத்தீர்ப்பைப் பிரசங்கிப்பதற்கு இதுவே நமக்கு மாதிரியாக இருக்க வேண்டும். பாவத்தைக் குறித்த எச்சரிப்பும், மனந்திரும்ப மறுப்பவர்களுக்கு வரும் நியாயத்தீர்ப்பின் செய்தியும் நம் பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் நம் செய்தி பாவியின் மீதான கோபத்தை அல்ல, பாவத்தின் நிமித்தம் நமக்கு உண்டாகும் துக்கத்தையே காட்ட வேண்டும்.
நரகத்தைப் பற்றிய ஒரு பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, கலகக்காரனான ஒரு டீனேஜ் பையன் வீட்டுக்குச் சென்றான். அவனது தந்தை, “மகனே, அந்தப் பிரசங்கத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார். அவன், “எனக்கு அது பிடிக்கவில்லை. அது எனக்குக் கோபத்தை உண்டாக்கியது!” என்று பதிலளித்தான். அடுத்த வாரம், அந்த மகன் இன்னொரு பிரசங்கியார் நரகத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதைக் கேட்டான். அவனது தந்தை மீண்டும், “அந்தப் பிரசங்கத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார். மகன், “நான் இயேசுவுக்கு ஊழியம் செய்ய வேண்டும். அந்தப் பயங்கரமான இடத்திற்கு நான் ஒருபோதும் போகவே கூடாது!” என்று பதிலளித்தான்.
தந்தை ஆச்சரியப்பட்டார். “போன வாரம் நரகத்தைப் பற்றிய பிரசங்கம் உனக்குக் கோபத்தை உண்டாக்கியது. இந்த வாரம் நரகத்தைப் பற்றிய பிரசங்கம் உன்னை மனந்திரும்ப வைத்திருக்கிறது. என்ன வித்தியாசம்?” என்று கேட்டார். அந்தப் பையன், “இந்தப் பிரசங்கியார் நரகத்தைப் பற்றி என்னை எச்சரித்தபோது அழுதார்” என்று சொன்னான்.
நியாயத்தீர்ப்பைப் பிரசங்கிக்கும்போது நீங்கள் அழுகிறீர்களா? நரகத்தைப் பற்றிப் பிரசங்கம் தயாரிக்கும்போது அழுகிறீர்களா? நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரிக்க வேண்டியிருந்தாலும் ஆடுகளை நேசிக்கிற ஒரு மேய்ப்பராக நீங்கள் இருக்கிறீர்களா?
[1]Martin H. Manser, Dictionary of Bible Themes. (London: Martin Manser, 2009). See also Joel B. Green and Scot McKnight, Dictionary of Jesus and the Gospels. (Westmont, Illinois: InterVarsity Press, 1992).
முடிவுரை: பிரசங்கத்தில் பரிசுத்த ஆவியானவரின் பங்கு
பிரசங்கியார்ளாகிய நாம், கேட்பவர்களுக்குப் பாவ உணர்வை (Conviction) உண்டாக்கப் பரிசுத்த ஆவியின் வல்லமையைச் சார்ந்திருக்க வேண்டும். உணர்ச்சிகளைத் தூண்டும் மனித நுட்பங்களை மட்டும் நாம் பயன்படுத்தினால், உடனடி முடிவுகளைக் காணலாம், ஆனால் ஆவிக்குரிய முடிவுகள் இருக்காது. பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம்மைக் கேட்பவர்களிடம் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
► 1 கொரிந்தியர் 2:1-16-ஐ வாசிக்கவும்.
ஆவிக்குரிய மாற்றம் பரிசுத்த ஆவியின் வல்லமையால் மட்டுமே நிகழும் என்பதை பவுல் புரிந்திருந்தார். அத்தேனே பட்டணத்தில் அரியொபாகில் தத்துவஞானிகளுடன் விவாதித்த பிறகு, அவர் கொரிந்துவுக்கு வந்தார் (அப்போஸ்தலர் 17:16-18:1). கொரிந்துவிலே, உயர்ந்த வசனத்தையாவது ஞானத்தையாவது பயன்படுத்தாமல், இயேசு கிறிஸ்துவையும் அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் தவிர வேறொன்றையும் பிரசங்கிக்கவில்லை என்று தீர்மானித்திருந்தார். அவர் பிரசங்கம் “ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” (1 கொரிந்தியர் 2:1-5).
ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரியவர்களுக்கு ஆவியானவர் விளக்குவார் என்று பவுல் அறிந்திருந்தார் (1 கொரிந்தியர் 2:13). பவுல் கல்வியை மதித்தார்; அவர் சிறந்த அறிஞர். பொது மேடையில் சிறப்பாகப் பேசுவது எப்படி என்று அவருக்குத் தெரியும்; அவர் சிறந்த கிரேக்கப் பேச்சாளர்களைப் படித்தவர். தர்க்கரீதியான வாதத்தை எப்படிக் கட்டமைப்பது என்று அவருக்குத் தெரியும்; ரோமர் நிருபம் தர்க்கரீதியான கட்டமைப்பின் ஒரு தலைசிறந்த படைப்பு. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, பவுல் பரிசுத்த ஆவியின் வல்லமையை மதித்தார். உண்மையான உணர்த்துதல் ஆவியானவரின் கிரியையினால் மட்டுமே வரும் என்று அவர் அறிந்திருந்தார்.
பவுல் கொரிந்தியர்களுக்கு, “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:7) என்று நினைப்பூட்டினார். பாத்திரம் பொக்கிஷம் அல்ல! ஊழியத் தலைவர்களாகிய நாம் களிமண்ணால் செய்யப்பட்ட உடைந்த பானைகள். ஆனால் நாம் ஊழியம் செய்பவர்களுக்கு நற்செய்தி என்னும் பொக்கிஷத்தைச் சுமந்து செல்லும் அற்புதமான சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
இது ஊழியத் தலைவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த எச்சரிக்கை. ஜாடியில் உள்ள பொக்கிஷத்தை விட ஜாடியின் மீது கவனம் செலுத்துவது எளிது. செய்தியை விட நமது வழங்கல் முறைக்கு (presentation) நாம் அதிக கவனம் செலுத்தலாம்; பொக்கிஷத்தை விட ஜாடிக்கு அதிக கவனம் செலுத்தலாம். வல்லமை தேவனுக்குரியது, நமக்குரியது அல்ல என்பதைக் காட்டவே தேவன் வேண்டுமென்றே மண்பாண்டங்களைப் பயன்படுத்துகிறார் என்று பவுல் நினைப்பூட்டுகிறார். நாம் தேவனுடைய வல்லமைக்குத் தடையாய் இருக்கக்கூடாது. அவருக்கு மட்டுமே சேரவேண்டிய மகிமையை நாம் எடுக்கக்கூடாது. நாம் ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்க வேண்டும்.
பாடம் 5 வீட்டுப்பாடங்கள்
(1) மத்தேயு சுவிசேஷம் ஐந்து முக்கிய பிரசங்கங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு பிரசங்கத்தையும் வாசித்து, அந்தப் பிரசங்கத்தை பயனுள்ளதாக்கும் ஒரு பண்பைக் கண்டறிந்து, அதைக் கீழே உள்ள அட்டவணையில் எழுதுங்கள். இந்த ஒப்படைப்புக்குச் சரியான பதில் அல்லது தவறான பதில் என்று எதுவும் இல்லை. “இயேசு எப்படி என்னை உணர்த்துகிறார், என்னை உற்சாகப்படுத்துகிறார் அல்லது அவருடைய செய்தியை நினைவில் வைத்துக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் எனக்கு உதவுகிறார்?” என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
(2) உங்கள் அடுத்த பிரசங்கத்தை நீங்கள் தயார் செய்யும்போது, இயேசுவின் பிரசங்கங்களில் நீங்கள் கண்டறிந்த பண்புகளை மறுஆாய்வு செய்யுங்கள். திறம்படத் தொடர்புகொள்வதற்கு அவருடைய பிரசங்கங்களை ஒரு மாதிரியாகப் பயன்படுத்துங்கள். இந்தப் பிரசங்கத்தை வகுப்பில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். “இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி நான் என் பிரசங்கத்தை அமைத்தேனா?” என்ற கேள்வியுடன் அந்தப் பிரசங்கத்தை மதிப்பிடுங்கள்.
Free to print for ministry use. No changes to content, no profit sales.
SGC exists to equip rising Christian leaders around the world by providing free, high-quality theological resources. We gladly grant permission for you to print and distribute our courses under these simple guidelines:
No Changes – Course content must not be altered in any way.
No Profit Sales – Printed copies may not be sold for profit.
Free Use for Ministry – Churches, schools, and other training ministries may freely print and distribute copies—even if they charge tuition.
No Unauthorized Translations – Please contact us before translating any course into another language.
All materials remain the copyrighted property of Shepherds Global Classroom.